×

தனியார் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது

பரமக்குடி, ஜன.21:  பரமக்குடி பேருந்து நிலையம் அருகே தங்கும் விடுதியில் லேப்டாப் திருடியதாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பரமக்குடி பேருந்து நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. விடுதியில், கடலாடியை சேர்ந்த ஜான்பால் வருமான வரி கணக்கு அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜான்பால் தனது அலுவலகத்தை மூடி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது, அலுவலகம் உடைத்து உள்ளே இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ஜெராக்ஸ் மிஷின் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பார்த்த போது ஒரு வாலிபர் கதவை உடைத்து பொருட்களை திருடியது தெரியவந்தது.

அடையாளம் தெரிந்த நபராக இருந்ததால் ஜான்பால் அலுவலகத்தின் கீழ் பகுதியில் நின்ற கீழக்கரையை சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார், சாகுல்ஹமீதிடம் விசாரணை செய்ததில், லேப்டாப், கம்ப்யூட்டர் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், அவரிடமிருந்து லேப்டாப்கள் - 2, கம்ப்யூட்டர் - 1 ஸ்கேனர் - 1 மற்றும் ஜெராக்ஸ் மிஷின் - 1 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சாகுல்ஹமீது கைது செய்யப்பட்டார்.

Tags : hotel ,
× RELATED என் பெற்றோர்களே எனது வழிகாட்டிகள்!