நெல்லை, ஜன. 21: நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 26.87 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல்களை நெல்லை கலெக்டர் விஷ்ணு, தென்காசி கலெக்டர் சமீரன் வெளியிட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை., நாங்குநேரி, ராதாபுரம், அம்பை ஆகிய 5 சட்டசபை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஷ்ணு வெளியிட அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் அரசியல் கட்சியினர் பெற்றுக் கொண்டனர். பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறுகையில், ‘‘நெல்லை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 6, 62,326 ஆண்கள், 6,90,732 பெண்கள், இதர வாக்காளர்கள் 101 பேர் என மொத்தம் 13,53,159 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 18 முதல் 19 வயது நிரம்பியவர்கள் 27,205 பேர். 20 மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டோர் 13,25,954 பேர் ஆவர். புதிதாக 20,124 ஆண்கள், 22,626 பெண்கள், இதர பிரிவினர் 12 பேர் என மொத்தம் 42,762 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்கள் 5,254 பேரும், இரட்டை பதிவுகளுக்காக 213 பேரும், இடம் மாறிச் சென்றவர்கள் 898 வாக்காளர்களும் என மொத்தம் 6,365 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 7,498 வாக்காளர்களின் பெயர் மற்றும் இதர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 3,665 வாக்காளர்கள் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் சப்-கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள், கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், மாநகராட்சி குடியிருப்போர் நலச்சங்கங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இதைப் பார்த்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினரின் கருத்துகளை கலெக்டர் கேட்டறிந்தார். கூட்டத்தில் டிஆர்ஓ பெருமாள், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் பிரதீக்தயாள், உதவி கலெக்டர் (பயிற்சி) அலர்மேல்மங்கை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் கந்தப்பன், மற்றும் தாசில்தார்கள், மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நெல்லை தொகுதி ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மாணவரணி துணை அமைப்பாளர் ரம்ஜான் அலி, கிழக்கு மாவட்ட திமுக வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வசூடாமணி, கணேஷ்குமார், அதிமுக வக்கீல் ஜோதிமுருகன், காளிதாஸ், காங். மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். தென்காசி: இதே போல் தென்காசி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சமீரன் நேற்று வெளியிட்டார். இதில் 5 தொகுதிகளிலும் சேர்த்து 6,53, 540 ஆண்கள், 6,80, 262 பெண்கள் உள்பட மொத்தம் 13, 33, 880 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டு விழா நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இவ்விழாவில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சமீரன் வெளியிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசி தொகுதியில் 1,48,532 பெண்கள் உள்பட 2,91,524 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அடுத்தபடியாக கடையநல்லூர் தொகுதியில் 1,45, 416 பெண்கள் உள்பட 2,88,950 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆலங்குளம் தொகுதியில் 1,34,018 பெண்கள் உள்பட 2,60, 141 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 1,30,195 பெண்கள் உள்பட 2,52,939 பேர் சங்கரன்கோவில் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மாவட்டத்தில் குறைந்தபட்சமாக வாசுதேவநல்லூர் தனித்தொகுதியில் 2,40,367 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் 1,18, 227 பேர் ஆண்கள். 1,22,101 பேர் பெண்கள் ஆவர். வழக்கம்போல் தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள 5 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 5 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 6,53, 540 ஆண்கள், 6,80, 262 பெண்கள் உள்பட என மொத்தம் 13, 33, 880 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது ஆண்களைவிட 26ஆயிரத்து 722 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்’’ என்றார். வாக்காளர் பட்டியல் வெளியீட்டு விழாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் மரகத நாதன், தேர்தல் தாசில்தார் அமிர்தராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், அரசுத்துறை அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகளில் 26 லட்சத்து 87 ஆயிரத்து 39 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாகன வசதி அதிமுக வக்கீல் ஜோதிமுருகன் பேசுகையில், ‘‘1000 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச் சாவடி என அமைக்கும் போது காற்றோட்டம் உள்ள இடத்திலும், பொதுமக்கள் நெரிசல் அதிகம் இல்லாத பகுதியிலும் அமைக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல தேர்தல் ஆணையம் சார்பில் வாகன வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார். தென்காசியில் 1504 பூத்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1504. வாக்குச்சாவடி இடங்களின் எண்ணிக்கை 740 ஆகும். தென்காசி மாவட்டத்தில் புதிதாக 44, 630 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2,431 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 972 வாக்காளர்கள் திருத்தம் மேற்கொண்டு உள்ளனர். 3,021 பேர் ஒரே தொகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அம்பையில் 10,769 பேர் நீக்கம் கடந்த நவ.16ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் அம்பை தொகுதியில் மட்டும் 10 ஆயிரத்து 769 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என திமுக வக்கீல் செல்வசூடாமணி கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். அதற்கு இறந்தவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் கூறினார். மேலும் இதுகுறித்து மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.