தூத்துக்குடி, ஜன. 21: தூத்துக்குடி விஎம்எஸ் நகரில் மழை நீரை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி விஎம்எஸ் நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து பல நாட்களாகியும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தி விஎம்எஸ் நகர் பகுதி பொதுமக்கள் அப்பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிப்காட் எஸ்ஐ சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.