மார்த்தாண்டம், ஜன.21: மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரிகோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கிடைத்த ரகசிய தகவல்படி முட்டந்துறை ஏலா கெர்பர்ட் ஜாண் என்பவரின் இடத்திற்கு சென்றனர். அங்கு விரிகோடு புதுச்சேரிவிளையை சேர்ந்த செந்தில்குமார், குமரேசன் (66) ஒரு பையுடன் நின்றுகொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் பையுடன் செந்தில்குமார் தப்பி ஓடினார். அப்போது பை தவறி விழுந்து டெட்டனேட்டர், வெடி உப்பு உள்ளிட்ட பொருட்கள் சிதறின. இதையடுத்து போலீசார் குமரேசனை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் ஆபத்தை ஏற்படுத்தும் டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, குமரேசனை கைது செய்தனர்.