திருப்பூர், ஜன.21:அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க கோரி நேற்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்க ஒன்றிய தலைவர்சு ஷீலா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் குமார் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில துணை தலைவர் பாக்கியம், சிஐடியு மாவட்ட இணை செயலாலர் பாலன், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சித்ரா உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்கள் மற்றும் உதவியாளருக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊழியர் விரோத போக்கினை கடைபிடிக்கும் பல்லடம் சிடிபிஒவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.