×

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் 24 லட்சம் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான சாப்ட்வேர் இன்ஜினியர் சிக்கினார்

சென்னை:  பூந்தமல்லி ராஜா அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மேரிலதா(41). பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வேலை மற்றும் லோன் வாங்கி தருவதாக ஆன்லைனில் வந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன். அதில் பேசியவர் எனது மகனுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி இதுவரை 24 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு இதுவரை வேலை வாங்கி தரவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பூந்தமல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(35). சாப்ட்வேர் இன்ஜினியர்  மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தொடர்ந்து பணத்தை இழந்துள்ளார். மேலும் பணம் தேவைப்பட்டதால், வேலை மற்றும் லோன் வாங்கி தருவதாக தனது எண்ணை பதிவிட்டு ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார்.இதை நம்பிய மேரிலதாவிடம் 24 லட்சம் வரை மோசடி செய்து ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், சூதாட்டத்திற்கு அடிமையான சந்தோஷ்குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ₹35 லட்சம் வரை இழந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

Tags : software engineer ,
× RELATED கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி சாப்ட்வேர் இன்ஜினியர் மாரடைப்பால் சாவு