சிவகாசி, ஜன.19: சிவகாசி நகராட்சி மருது பாண்டியர் தெரு வழியாக காலை 7 மணிக்கு மேலும், இரவு 10 மணிக்கு முன்பும் கனரக வாகனங்கள், பஸ்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகராட்சி பகுதியில் வாகன பெருக்கத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாற்று வழிப்பாதை அமைக்கப்பட்டது. இதன்படி சிவகாசி - திருத்தங்கல் சாலையில் இருந்து மருதுபாண்டியர் நகர் வழியாக மாற்று வழி ஏற்படுத்தப்பட்டது. சிவகாசி பஜார் பகுதி மற்றும் திருத்தங்கல் சாலையில் வரும் வாகனங்கள் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் இந்த வழியாக திருப்பி விடப்படுகிறது.
இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. சிவகாசி பஸ்நிலையத்தில் இருந்து விருதுநகர் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் பைபாஸ் சாலை வழியாக சென்றால் அதிக நேரம் பிடிப்பதால் அதிகாலை நேரங்களில் மருதுபாண்டியர் நகா் வழியாக செல்கின்றன. இதே போன்று விருதுநகர் சாலையில் இருந்து வரும் பஸ்களும் காரனேசன் விலக்கில் இருந்து பைபாஸ் சாலை வழியாக செல்லாமல் மருதுபாண்டியர் நகர் வழியாக இரவு நேரங்களில் பஸ்நிலையம் வருகின்றன.
சிவகாசி நகர் பகுதியில் காலை 7 மணிக்கு மேலும் இரவு 10 மணிக்கு முன்பும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். காலை 7 மணிக்கு மேலும், இரவு 10 மணிக்கு முன்பும் கனரக வாகனங்கள், பஸ்கள் சிவகாசி மருதுபாண்டியர் நகர் வழியாக வந்து செல்வதால் நகரின் மையப்பகுதியான தேரடி விலக்கு, முருகன் கோயில் விலக்கு, காமாக் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நகர் பகுதியில் போகககுவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும் காலை7 மணிக்கு மேலும், இரவு 10 மணிக்குள்ளும் கனரக வாகனங்கள் மருதுபாண்டியர் நகர் வழியாக வந்து செல்ல போலீசார் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.