ராஜபாளையம், ஜன. 19: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென்னந்தோப்பு, வயல்வெளி, தோப்புகள் பகுதிகளில் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் விளைபொருட்களை பறித்து விற்பனைக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காய்கறி வகைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, உடனடியாக தமிழக அரசு உரிய நஷ்டஈடு வழங்கி தொடர்ந்து விவசாய பணிகளை தொடர உதவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வேளாண் கடன்களை வழங்குவதுடன், மானிய விலையில் விதைகள், இடுபொருள்கள் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளர்.