×

வழிகாட்டுநெறிமுறைகளை கடைபிடிக்கா விட்டால் நடவடிக்கை ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

திருச்சி, ஜன.19: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழாவையொட்டி நேற்று தைத்தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா இன்று (19ம் தேதி) தொடங்கி வரும் 29ம் தேதி வரை 11 நாட்கள் நடக்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. தைத்தேரோட்ட விழாவை முன்னிட்டு தெற்கு உத்திரை வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. அப்போது முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோயில் அறங்காவலர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர். கோயில் அறங்காவலர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தைத்தேரோட்ட திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் இரண்டாம் நாளான 20ம்தேதி காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் வீதியுலா வருகிறார். 21ம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலையாளி வாகனத்திலும், 22ம்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும் மாலை கருட வாகனத்திலும், 23ம் தேதி காலை சேஷ வாகனத்திலும் மாலை ஹனுமந்த வாகனத்திலும், 24ம் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார்.

25ம் தேதி நெல் அளவு கண்டருளுகிறார். 26ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27ம் தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். 4.45 மணிமுதல் 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர்லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 28ம் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான வருகிற 29ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் அசோக்குமார் (கூடுதல் பொறுப்பு), உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Aurangam Ranganathar Temple ,
× RELATED ரங்கம் ரங்கநாதர் கோயிலில்...