திருச்சி, ஜன.19: திருச்சி ஏர்போர்ட் அம்பேத்கர்நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடப்பதால் குடியிருப்புவாசிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். திருச்சி ஏர்போர்ட் அருகே அம்பேத்கர்நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அவர்கள் கூறுகையில், ‘திருச்சி ஏர்போர்ட் அருகே அண்ணா அறிவியல் கோளரங்கம் எதிரே 300க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் ஏர்போர்ட் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் எங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் ‘எவ்வித அங்கீகாரமின்றி ஏர்போர்ட்டுக்கு சொந்தமான இடத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர். திடீரென வீடுகளை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கு செல்வது. தற்போது எங்கள் குடியிருப்புகளை காலி செய்யக்கூடாது. உரிய மாற்று இடம் வழங்க வேண்டும்’ என்றனர்.