‘பனி முகடுகள் சூழ்ந்து நிற்கும் இமயமலை எல்லைகள். அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைகள். பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைகள். இவை மூன்றிலும் நிறைந்து நிற்கும் நீண்ட நெடிய கடல் பகுதிகள்,’’. இவை அனைத்தையும் கண்காணித்து, தேசத்தை காத்து நிற்பவர்கள் இந்திய ராணுவத்தின் முப்படை வீரர்கள். இதற்காக தங்கள் இன்னுயிரையும் பல நேரங்களில் இழந்தே அவர்கள் நாடு காத்து நிற்கின்றனர். இப்படிப்பட்ட ஒப்பற்ற முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றுவதும், முன்னாள் வீரர்களை கவுரவிப்பதும், அவர்களின் குடும்பத்திற்கு கரம்நீட்டுவதும் நமது சமூக கடமைகளில் முதன்மையானது. இதை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் டிசம்பர் 7ம்தேதி (இன்று) இந்திய ஆயுதப்படை கொடி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒப்பற்ற சமுதாயக் கடமையை மக்கள் பங்களிப்புடன் நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலம் நன்கொடை நிதி திரட்டப்படுகிறது. இந்த நிதியானது படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்தக் கொடிநாளில், சிறிய அளவிலான கொடியைப் பெற்றுக் கொண்டு, நம்மால் இயன்ற அளவு நிதியை கொடுத்து இந்தியப் படைவீரர்களின் குடும்பத்தினர் நல்வாழ்வுக்கு நாமும் உதவலாம். அதேநேரத்தில் இப்படிப்பட்ட சூழலில் தாய்திருநாட்டின் முப்படைகள் குறித்த சிறப்புகளை அனைத்து தலைமுறையினரும் அறிந்திருப்பதும் மிகவும் அவசியம் என்கின்றனர் நாட்டுப்பற்று கொண்ட வரலாற்று ஆய்வாளர்கள்.
இதுகுறித்து முப்படைகள் சார்ந்த முன்னோடி வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7ம்தேதி, படை வீரர் கொடி நாளை இந்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. பிரிட்டீஷார் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை கிடைத்தவுடன், இந்திய அரசுக்கு தனது பாதுகாப்புப் பணியாளர்களின் நலனை நிர்வகிக்க வேண்டிய தேவை எழுந்தது. இதன்காரணமாக 1949ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் நாளில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு குழு ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் நாளை கொடி நாளாக கடைபிடிக்க முடிவு செய்தது. கொடி நாளைக் கடைப்பிடிப்பதன் பின்னணியில், பொதுமக்களுக்கு சிறிய கொடிகளை விநியோகித்து, அதற்கு பதிலாக நன்கொடைகளைச் சேகரிக்க வேண்டும்.
நாட்டிற்காகப் போராடும் ஆயுதப்படை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களைக் கவனித்துக்கொள்வது இந்தியக் குடிமக்களின் பொறுப்பு என்று கருதுவதால் கொடி நாள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய ஆயுதப் படைகளின் கொடியானது இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொடியைப் போன்றது. இது முதன்முதலில் 1956ல் பயன்படுத்தப்பட்டது. மேலும், சைப்ரஸ், கென்யா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட சக காமன்வெல்த் நாடுகளால் பயன்படுத்தப்படும் பிரிட்டீஷ்-இணைக்கப்பட்ட பிரதேசங்களில் பொதுவான நிறங்களைக் கொண்டதாகும். இந்தியக் குடியரசின் ராணுவப் படைகள் என்பது இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப் படை மற்றும் இந்திய கரையோரப் பாதுகாப்பு படை என நான்கு தொழில் முறை சீருடை அணிந்த சேவைகளாக செயல் படுகின்றன.
இந்திய ஜனாதிபதி ராணுவத் தலைமை கமாண்டராக இருக்கிறார். மேலும், இந்திய இராணுவப் படை ஒரு நான்கு நட்சத்திர ராணுவ தளபதியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்திய ஆயுதப்படைக்குப் பல துணைப்படை அமைப்புகள் (அசாம் ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு எல்லைப்புற பாதுகாப்பு படை) மற்றும் சேவைகளிடையே உளவுத்துறை நிறுவனங்கள் துணைபுரிகின்றன. இந்திய ஆயுதப்படைகள் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரின் தலைமையிலான மத்தியப் பாதுகாப்பு அமைச்சக நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன. இந்திய ராணுவம் 1.3 மில்லியன் (13லட்சம்) தீவிரஊழியர்களைக் கொண்டு உலகின் 3வது மிகப் பெரிய ராணுவ சக்தியாக விளங்குகிறது. இந்திய ஆயுதப் படைகள் 1947, 1965 மற்றும் 1971ம் ஆண்டுகளில் இந்தியா- பாகிஸ்தான் போர், 1971ம் ஆண்டு கோவா படையெடுப்பு, இந்தியா- சீனா போர், கார்கில் போர் மற்றும் சியாச்சின் மோதல் உட்பட பல முக்கிய ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்திய ஆயுதப் படையானது உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றாகும்.
உலகின் மிகப் பெரிய ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. தற்போது, ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இந்திய ராணுவத்திற்கு உபகரணங்கள் அளிக்கும் முதன்மை வெளிநாடுகள் ஆகும்.
ஏறக்குறைய 1.32 மில்லியன் செயலார்ந்த படைகளையும், 2.14 மில்லியன் இருப்புப் படைகளையும் கொண்டுள்ளது. இந்தியா, அமெரிக்க டாலர் மதிப்பில் 36.03 பில்லியன் வரை ராணுவத்திற்காகச் செலவிடுகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.83 சதவீதம் ஆகும். இவை அனைத்தையும் உணர்ந்து நாம் கொடிநாளை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும். இவ்வாறு வரலாற்று ஆய்வாளர்கள் கூறினர்.
3 அடிப்படை காரணங்கள்
‘‘கொடி நாள் என்பது மூன்று அடிப்படை காரணங்களை ஊக்குவிக்க உதவுகிறது. முதலில் போரில் உயிரிழந்தோர் குடும்பங்களின் மறுவாழ்வு, பிறகு பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன், மூன்றாவதாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மீள்குடியேற்றம் மற்றும் நலன் ஆகியவற்றை பிரதான இலக்காக கொண்டது. ஆயுதப்படைகளின் கொடி நாள் நினைவேந்தல் மற்றும் கொடிகள் விநியோகம் மூலம் நிதி சேகரிப்பு: இந்தியாவின் தற்போதைய மற்றும் மூத்த ராணுவ வீரர்களுக்கு இந்தியர்கள் நன்றியையும் பாராட்டுதலை தெரிவிக்கவும், நாட்டிற்கான சேவையில் இறந்தவர்களை அங்கீகரிக்கவும் இது ஒரு நேரம் எனும் அடிப்படையில், இந்தியக் கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது,’’ என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உதட்டளவில் தான் நல்லுறவு
‘‘இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தானும், சீனாவும் பக்கத்து நாடுகளாக உள்ளது. இவை இரண்டுமே அணுஆயுதத்தை தங்கள் வசம் வைத்துள்ள நாடுகள். உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இரு அணுஆயுத நாடுகளை எதிர்கொண்டு, எல்லையை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு உள்ளது. இந்த நாடுகளுடன் நல்லுறவு என்பது உதட்டளவில் மட்டுமே உள்ளது. உணர்வுப்பூர்வமாக இல்லை என்பதும் உண்மை. இதன் காரணமாக எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலேயே நமது முப்படைகளும் உள்ளன,’’ என்பதும் குறிப்பிடத்தக்கது.
