×

சிவகங்கை அருகே ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம் ஒரு எலுமிச்சை ரூ.5100 கோயில் விழாவில் நடந்த ஏலம்


 சிவகங்கை, ஜன. 17: சிவகங்கை அருகே நடந்த பொங்கல் விழாவில் ஒரு கரும்பு ரூ.35 ஆயிரத்திற்கும், ஒரு எலுமிச்சம் பழம் ரூ.5100க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. சிவகங்கை அருகே மதகுபட்டி மேலத்தெரு, கீழத்தெரு பகுதிகளில் குறிப்பிட்ட சமூகத்தினர் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது காவல் தெய்வங்களாக பச்சநாச்சி பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபட்டு வருகின்றனர். பிடாரி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொங்கல் விழாவில் மேலத்தெருவில் பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு போன்ற ஆபரணங்களை தவிர்த்து வெள்ளை சேலை கட்டி ஒற்றுமையுடன் ஒரே இடத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர்.

கீழத்தெருவில் நடந்த பொங்கல் விழாவில் தொட்டில் கரும்புகளை பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். அவ்வாறு செலுத்திய தொட்டில் கரும்புகள், அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கோயில் வாசலில் கூடி பொங்கலிட்ட பின் ஏலம் விடுவது தொன்று தொட்டு நடக்கும் வழக்கம். அவ்வாறு ஏலமிட்டதில் முதல் கரும்பு ரூ.35ஆயிரத்திற்கு ஏலம் போனது. அது போல் விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை பழம் ஒன்று ரூ.5ஆயிரத்து 100க்கு ஏலம் போனது. ஏலம் எடுக்க உள்ளுர் மட்டுமின்றி வெளியூர் பொதுமக்களும் பல பகுதிகளில் இருந்து வந்து பங்கேற்றனர்.

இந்த இரு கிராம மக்களும் முன்னோர் கால பழக்க வழக்கங்களை இன்று வரை கடைபிடிக்கின்றனர். கடுமையான போட்டிகளுக்கிடையே கரும்பு மற்றும் எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்தனர். இந்நிகழ்ச்சிகளில் சுற்றுப்புற கிராமத்தினர் மற்றும் வெளியூர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கிராமத்தினர் கூறியதாவது: சாமிக்கான பொருட்களை ஏலம் எடுத்துச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. வசதி படைத்தோர், ஏழை என வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சமமாக விழாவில் ககலந்துகொள் வேண்டும் என்பதற்காக ஆபரணம், உயர் ரக ஆடைகள் ஆகியன முந்தைய காலத்தில் இருந்து தவிர்க்கப்பட்டது. அதையே தற்போதும் கடைப்பிடிக்கிறோம் என்றனர்.

Tags : Sivagangai ,temple festival ,
× RELATED பயணிகளுடன் வந்த பேருந்தில் தீ