திண்டுக்கல், ஜன. 17: பொங்கல் பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களையொட்டி, சட்ட விரோதமாகவும், கள்ளச்சந்தையிலும் மது விற்பனை அதிகமாக வாய்ப்புள்ளது என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.ஐ.ஜி முத்துச்சாமி சோதனையில் ஈடுபட உத்தரவிட்டார். இதன்படி, திண்டுக்கல், பழநி, கொடைக்கானல், நிலக்கோட்டை, வடமதுரை, நத்தம், ஒட்டன்சத்திரம் என மாவட்டம் முழுவதும் உள்ள மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்ததந்தப் பகுதி காவல்நிலைய போலீசார் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 1800 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 160 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.