காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில், 5வது ஆண்டாக நேற்று 108 கோ பூஜை நடந்தது. இதில், கஜ பூஜை செய்வதற்கு ஈடான கோ பூஜை, உலக மக்களின் நன்மையினை கருதியும், இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருக வேண்டியும், மகா லட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கவேண்டியும், மக்கள் அமைதியாக வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதை முன்னிட்டு காலை ராகு, கேது, சனீஸ்வர பகவான், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், அத்தி விருட்ச ருத்ராக்ஷ லிங்கம் ஆகியோர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் விநாயருக்கு 16 வகையான தீப, தூப ஆராதனைகளும், 108 பசுக்கள் மற்றும் கன்றுகளை இடம்பெற செய்து கோ பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.