×

நீலகிரியில் மூன்று மையங்களில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஊட்டி,ஜன.17:  நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. கொரோனா தொற்றால் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 900க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் உள்ள சேட் மகப்பேறு தலைமை மருத்துவமனையில் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், முன்கள பணியாளர்களான செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியாதவது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊட்டி சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் குன்னூர் அரசு மருத்துவமனை, கேத்தி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், தூய்மைபணியாளர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. முன்னேற்பாடாக கோவை மண்டல தடுப்பூசி மையத்தில் இருந்து 5,300 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து பெறப்பட்டு, மாவட்ட தடுப்பூசி மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் 4,845நபர்கள் தடுப்பூசி போடுவதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்கள் இன்றைய தினம் (நேற்று) ஒரு மையத்தில் 100 நபர்கள் வீதம் 300 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.  ஊட்டி சேட் அரசு நினைவு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்கள்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என 4 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அரசின் அடுத்த அறிவிப்பு வந்தவுடன், இரண்டாம் கட்டமாக முன்னிலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்ட காலமாக நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். என்றார். இந்நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் இணை இயக்குநர் பழனிச்சாமி, துணை இயக்குநர் பாலுசாமி, குடும்ப நலத்துறை துணை இயக்குநர் ஹரியன் ரவிக்குமார், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துக் கொணட்னர்.

குன்னூர்: குன்னூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, கேத்தி, குன்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஊசி போடும் பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக ஊட்டியில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டனர். குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத்துறை உதவி இயக்குநர் பழனிச்சாமி கொரோனா தடுப்பூசி போடும் பணியை முன்னின்று துவக்கி வைத்தார். இதில் முதல் நபராக சுகாதாரத்துறை உதவி இயக்குநர் பழனிச்சாமி தடுப்பூசியை போட்டு கொண்டார். அவரை தொடர்ந்து டாக்டர் முரளி, பல்நோக்கு மருந்துவமனை பணியாளர் சசிக்குமார், சலவை பணியாளர் சுகுமார், பார்மஸிட் சாந்தா, செலிவியர் சுசிலா ஆகியோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கு முன் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் அனைத்தும் சேகரிக்கபடுகின்றன. மேலும் தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். அப்போது, ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.    மேலும் மருத்துவமனை வளாகத்தில் இரண்டு 108 ஆம்புலன்ஸ் தாயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஏனைய  முன்கள பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ளவுள்ளனர்.

Tags : Corona ,frontline workers ,centers ,Nilgiris ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...