சென்னை: மடிப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் பஜார் தெருவில் அமைந்துள்ளது. இங்கு மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மூவரசம்பட்டு ஆகிய பகுதிகளின் உதவி பொறியாளர் அலுவலகங்களும் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் அதிகாரிகள் அதிகளவில் லஞ்சம் பெறுவதாகவும், தற்போது பலரிடம் பொங்கல் பரிசு பெறுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இங்கு திடீர் சோதனை நடத்தினர். முன்னதாக, அங்கு பணியில் இருந்தவர்கள் வெளியில் சென்றுவிடாமல் அலுவலக கேட்டை மூடினர்.
தீவிர சோதனையில் 3 உதவி பொறியாளர்களின் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ₹1.3 லட்சம் ரொக்கம், ₹20 ஆயிரம் மதிப்புள்ள 2 வெள்ளி டம்ளர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, மின்வாரிய உதவி பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.