பரமக்குடி, ஜன.13: பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 28ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. பரமக்குடியில் உள்ள அனுமார் கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 28ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று முன்தினம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நாள் முழுவதும் பக்தர்கள் சுவாமியை சுற்றி வந்து தரிசனம் செய்தனர். அமாவாசை நாளான நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு 13 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மூலவருக்கு வடைமாலை சாற்றி வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல் பரமக்குடி நகரில் உள்ள அனுமார் கோதண்டராமர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.