விளாத்திகுளம், ஜன.13: விளாத்திகுளம் காமராஜ்நகர் முதல் தெருவில் சேர்ந்தவர் கார்த்திகேயன்(40). இவரது மனைவி ஜெயகோமு(34). இவர்கள் விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு ஜெராக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு வெளியே சென்றனர்.
மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கையில் கதவு மற்றும் பீரோ பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. ஆனால் பீரோவில் வைத்திருந்த 2 செயின், கம்மல் உட்பட மொத்தம் 11 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து கார்த்திகேயன் விளாத்திகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிந்து நகை மற்றும் பணத்தை திருடியவரை தேடி வருகின்றனர்.