தென்காசி, ஜன. 13: தென்காசி அடுத்த வல்லம் அண்ணாதெருவை சேர்ந்தவர் பாலம்மாள் (74). இவர் கடந்த 4ம் தேதி அதிகாலை வெளியே நடந்துசென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த ஒருவர், பாலம்மாள் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தார். மொத்தம் 16 கிராம் எடைகொண்ட நகையில் 7 கிராம் பாலம்மாவின் கழுத்தில் தங்கிவிட்டது. மீதமுள்ள 9 கிராம் நகையுடன் தப்பிச்சென்றவர் குறித்து குற்றாலம்
போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வுமேற்கொண்ட போது நகை பறிப்பில் ஈடுபட்டது வல்லம் ஆர்சி தெருவைச் சேர்ந்த தேவேந்திரனின் மகனும், திருப்பூரில் துணி கட்டிங் மாஸ்டராக பணிபுரிந்தவருமான மணிகண்டன் (45) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.