நாமக்கல், ஜன.12: சேந்தமங்கலம் காந்திபுரத்தை அருகே அண்ணா நகரைச் சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு விபரம்: சேந்தமங்கலம் அண்ணா நகர் 17வது வார்டு திராவிடர் தெருவில், கடந்த 25 ஆண்டுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது இப்பகுதியில் புதியதாக சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் வசித்துவரும் காவல்துறையில் பணியாற்றி வருபவரும், அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவரும் சேர்ந்து, தங்களுக்கு சொந்தமான நிலத்தில் சாக்கடை அமைந்திருக்கிறது எனக்கூறி, புதியதாக கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் பணியை தடுக்கிறார்கள்.இதனால் அருகே குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்குவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை ஏற்படுகிறது. எனவே, ஆக்கிமிரப்பில் உள்ள பஞ்சாயத்து நிலத்தை அளவீடு செய்து, புதிய சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தயாளன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு விபரம்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300க்கும் மேற்பட்டோர் கொசுப்புழு ஒழிப்பு பணியில், கடந்த 10 ஆண்டாக பணியாற்றி வருகிறோம். இப்பணிக்கு தினக்கூலியாக ₹285 மட்டும் வழங்கப்படுகிறது.
கொசு புகை மருந்து அடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியத்தில் 20 பேர் வீதம் 300 பேர் வேலை செய்கிறோம். கிராமத்திற்கு சுமார் 30 கிலோ மீட்டர் வரை சென்று பணி செய்கிறோம். பேருந்து கட்டணம் ₹50 வரை செலவாகிறது. மீதமுள்ள ₹235 ஐ வைத்து குடும்பத்தை காப்பாற்றும் சூழ்நிலையில் இருந்து வருகிறோம். எனவே தினக்கூலியை குறைந்தபட்சம் ₹500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.