ராசிபுரம், ஜன.12: ராசிபுரம் அடுத்துள்ள பட்டணம் பேரூராட்சியில் ஆழ்துளை கிணற்றுக்கு பயன்படுத்தப்படும் பழைய இரும்பு பைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை முறையான அறிவிப்பின்றி, முறைகேடாக தனிநபர் ஒருவருக்கு 30 இரும்பு பைப்புகளை டெண்டர் விடப்பட்டதாகவும், பேரூராட்சி அலுவலக வாகனத்தில் விடுமுறை நாளில் பேரூராட்சி ஊழியர்கள் ஏற்றி அனுப்பி வைத்ததாக கூறி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த ராசிபுரம் டிஎஸ்பி லட்சுமணகுமார், எஸ்ஐ ரம்யா மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 30 இரும்பு பைப்புகளையும் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து, மீண்டும் அதற்கு டெண்டர் விடவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கை செயல் அலுவலர் மூலம் நிறைவேற்றப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தின் பூட்டை திறந்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.