இலுப்பூர், ஜன.12: அன்னவாசல் அருகே உள்ள தச்சம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன் (45). இவர் தச்சம்பட்டி ஊராட்சியில் 3வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் இருக்கும் மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் வருவாய்துறையினர் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது வார்டு உறுப்பினர் பாஸ்கரும் அங்கு சென்றுள்ளார். வருவாய்த் துறையினர் விசாரணை செய்துசென்று விட்ட பின்னர் பாஸ்கர்தான் வருவாய் துறையிரை கூட்டி வந்தார் என கூறி மனோகரன் தரப்பினர் பாஸ்கரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த பாஸ்கரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் ஊராட்சி வார்டு உறுப்பினர் பாஸ்கரனை தாக்கிய தச்சம்பட்டியை சேர்ந்த மனோகர், இந்திரா, ராஜசேகரன், ரவி, சந்துரு, வசந்தா, பாலு, ஹரி, பானு உள்பட 10 பேர்மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.