×

போடி அருகே பொறியியல் பட்டதாரி சரமாரி வெட்டிக்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு

போடி/ஆண்டிபட்டி, ஜன. 12: போடி அருகே உள்ள கீழச்சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஒண்டிவீரன் மகன் ரவிக்குமார் (26), பொறியியல் பட்டதாரி. இவர், பெங்களூருவில் உள்ள தனியார் கோழிப்பண்னையில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று வருகிறேன் என கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர். அப்போது போடி-சில்லமரத்துப்பட்டி சாலையோரம் புளியமரத்தின் அடியில் பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். ஒண்டிவீரன் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலையபோலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ரவிக்குமாரின் உறவினர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று வந்தனர். ரவிக்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள், மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். பின்னர் ரவிக்குமாரை படுகொலை செய்த நபர்களை கைது செய்யும் வரை, உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கலைந்து சென்று தேனி கலெக்டரிடம் மனு அளிக்கச் சென்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Relatives ,engineering graduate ,Theni Medical College Hospital ,Bodi ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...