சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டி வெளியிட்ட அறிக்கை: நாகை மாவட்டத்தில் பலத்த மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தாளடி நெற்பயிர்களும், சம்பா பயிர்களும் முழுவதுமாக பயிரில் மூழ்கிப்போய் உள்ளன. ஒட்டு மொத்தமாக டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் இழப்பீடாக வழங்கிட வேண்டும். ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு கோரும் நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
வழக்கம் போல், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு விவசாயிகளையும், மக்களையும் வஞ்சித்துவிடக் கூடாது. பல பகுதிகளில் மக்கள் குடியிருக்கும் வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆடு – மாடுகள் இறந்துள்ளன. இவற்றையும் ஈடு செய்யக் கூடிய வகையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுந்து தொங்கிய மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து பிரதாப் என்ற 19 வயது இளைஞரும், கும்பகோணம் வட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ரேணுகா என்ற 20 வயது இளம் பெண்ணும் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கும் உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
