திண்டுக்கல், ஜன. 12: நிலக்கோட்டை வாரச்சந்தையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வியாபாரிகள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். நிலக்கோட்டை வாரச்சந்தை வியாபாரிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர். பின்னர் வியாபாரிகள் கூறுகையில், ‘நிலக்கோட்டை வாரச்சந்தையில் சுமார் 400 பேர் வியாபாரம் செய்து வருகிறோம். இங்கு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக 2 மடங்கு, 3 மடங்கு வசூலித்து வருகின்றனர். இவ்வாறு வசூல் செய்யும் தொகைக்கு ரசீதும் தருவதில்லை. ரசீது கேட்டால் அவர்களை மிரட்டியும், தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். இதுகுறித்து நிலக்கோட்டை பேரூராட்சி செயல்அலுவலர், பேரூராட்சிகள் இணை இயக்குனர், மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஐகோர்ட் மதுரை கிளையில் பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் உடனடியாக விசாரணை நடத்தி பொதுப்படை தன்மையாக கட்டண வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.