சூலூர், ஜன.12: சூலூர் அருகே சுல்தான்பேட்டை குமாரபாளையம் பகுதியில் தனியார் நிறுவன மேலாளர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். சூலூர் அருகே சுல்தான்பேட்டை குமாரபாளையத்ைத சேர்ந்தவர் சார்லஸ் ஜான் வயது (62). இவர் அதே பகுதியில் உள்ள தென்னை நார் தயாரிக்கும் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி செலின். ஓடக்கல் பாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்றனர். செலின் மாலையில்தான் வீடு திரும்புவார். சார்லஸ் மதிய உணவிற்காக நேற்று வீட்டிற்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் கம்பெனிக்கு வராததால் சந்தேகமடைந்த கம்பெனி ஊழியர்கள் கணேசன், தங்கராஜ் ஆகியோர் சார்லசின் வீட்டிற்குச் சென்றனர். கதவு திறந்திருந்ததால் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது கழுத்து, மார்பு, வயிறு பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த ெவள்ளத்தில் சார்லஸ் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் சம்பவயிடம் வந்து சார்லஸின் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த கம்பெனி மேலாளரை கொலை செய்த சம்பவம் சுல்தான்பேட்டை சுற்று வட்டார கிராம பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.