×

பனியன் தொழிலாளர்களுக்கு ஜன.13 முதல் பொங்கல் விடுமுறை

திருப்பூர், ஜன.12:  திருப்பூர் பின்னலாடை நிறுவன தொழிலாளர்களுக்கு ஜன.13ம் தேதி முதல் பொங்கல் விடுமுறை அளிக்கப்படுகிறது. திருப்பூர் ஆடை உற்பத்தி மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தினமும் ஓய்வின்றி பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுதவிர, தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு நீண்டநாள் விடுப்பு எடுப்பதை தொழிலாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, பெரும்பாலான தமிழக தொழிலாளர்கள், கூடுதல் நாட்கள் விடுப்பு எடுத்து, சொந்த ஊர்களுக்குச் சென்று, பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.

வரும் 14ம் தேதி போகி, 15ம் தேதி பொங்கல் பண்டிகை, 16ம் தேதி மாட்டுப்பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக, ஆடை உற்பத்தி, ஜாப் ஒர்க் நிறுவனங்கள், வரும் 13ம் தேதி முதல் விடுமுறை அளிக்க உள்ளன. பொங்கலுக்கு பின் 18ம் தேதி முதல் நிறுவனங்கள் மீண்டும் இயங்க துவங்கும். இருப்பினும், 10 முதல் 15 நாட்களுக்கு பின்னரே, தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமாநில தொழிலாளர் அதிகம் உள்ளதால், அந்த தொழிலாளர்களை கொண்டு அவசர ஆர்டர்களை கையாள பின்னலாடை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

Tags : holiday ,Banyan ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!