×

மாநில சமநிலை வளர்ச்சி நிதி திட்டம் சிறப்பாக செயல்படுகிறது

கோவை, ஜன. 12:  கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாநில சமநிலை வளர்ச்சி நிதி பணி முன்னேற்றம் தொடர்பான  ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றது. மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் பொன்னையன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொன்னையன் கூறியதாவது:  மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவால் மாநில சமநிலை வளர்ச்சி நிதி திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பின்தங்கிய பகுதியினை முன்னேற்றம் அடைய செய்வதற்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தனிநபர் வருமானம், வறுமை ஒழிப்பு, தொழில்துறை முன்னேற்றம் ஆகிய திட்டங்கள் குறித்த கருத்துருக்களை மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு அனுப்பி அக்குழுவின் நிதி உதவியோடு பல்வேறு திட்டங்களை திறம்பட செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் வால்பாறை, ஆனைமலை வட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் மாநில சமநிலை வளர்ச்சி நிதியின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  

அதனடிப்படையில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வால்பாறை பகுதியில்  அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியுடன் கூடிய மகப்பேறு பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, படுக்கை வசதி கொண்ட பிந்தைய செயல்பாட்டு பிரிவு, படுக்கைகள் கொண்ட குழந்தைகள் பிரிவுக்கான அறைகள், மருத்துவர் மற்றும் செவிலியர் குடியிருப்பு  உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பள்ளிக்  கட்டிடங்கள், பள்ளிகளில் சோலார் மூலம் மின்சேமிப்பு ஏற்படுத்தவும், பள்ளிகளில் சமையலறை தோட்டம் ஏற்படுத்தி தரவும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பொன்னையன் கூறினார்.கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட ஊராட்சித்தலைவர் சாந்திமதி அசோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட ஊராட்சி செயலர் சங்கமித்திரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி