பட்டுக்கோட்டை, ஜன. 11: பட்டுக்கோட்டை பூமல்லியார்குளத்தில் மங்களாம்பிகை உடனுறை ஆதிகைலாசநாதர் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த சிவாலயத்தில் உள்ள நந்திக்கு நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு மஞ்சள், திரவியம், அரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நந்திக்கும், ஆதிகைலாசநாதர் மற்றும் மங்களாம்பிகைக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு நந்தி பகவானையும், ஆதிகைலாசநாதர், மங்களாம்பிகையை வழிபட்டனர்.