அரியலூர், ஜன.11: அரியலூர் மாவட்டம். நாகமங்கலம் கிராமத்தில் எஸ்பி.சீனிவாசன், கிராம விழிப்புணர்வு காவல் அலுவராக காவலர் திருமுருகன் என்பவரை நியமித்து, மக்களுக்கு அவரது பணி குறித்து விவரித்தார். கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் பணியானது, கிராமத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்கள், திருட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னையை உரிய நேரத்தில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராம மக்களுக்கு அச்சம் விளைவிப்பவர்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் தனக்கு ஒதுக்கப்பட்ட கிராம மக்களின் பாதுகாப்பின் முழுப்பொறுப்பையும் பெற்று அதற்காக திறம்பட செயல்படுவார். மேலும், இவர் மக்கள் மற்றும் காவல் நிலையத்திற்கு இடையே ஒரு இணைப்புப் பாலமாக செயல்படுவார். இதனால் காவல்துறை மக்களின் நன்மதிப்பைப்பெற்று மக்களின் பிரச்னைகள் குறித்த தகவல் சரியான நேரத்தில் கிடைப்பதன் மூலம் காவல்துறை தனது நடவடிக்கையை திறம்பட மேற்கொள்ளவும், காவல்துறை மற்றும் மக்களுக்கிடையே உள்ள நட்புறவை அதிகரிக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமார், விக்ரமங்கலம் எஸ்ஐ., சரத்குமார், நாகமங்கலம் ஊராட்சி தலைவர் மற்றும் ஊர் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் உடனிருந்தனர். இதனை போன்று நாகம்பந்தல் மற்றும் சூரியமணல் கிராமங்களிலும் கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி நியமிக்கப்பட்டு மக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.