கோவை, ஜன.11:கோவை புலியகுளம் காந்திநகரை சேர்ந்தவர் 29 வயது பெண். இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த பக்கத்து தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் தவறாக பேசி அநாகரிகமாக நடந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அந்த வாலிபரிடம் இது குறித்து கேட்பதற்காக தனது சகோதரியுடன் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், பெண்களிடம் தகராறில் ஈடுபட்டது புலியகுளம் வடசெட்டியார் லே-அவுட்டை சேர்ந்த அரவிந்தன்(22) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.