கோவை: ‘நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் தான் தோல்வியடைந்ததற்கு அதிமுக தான் காரணம்’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் செய்தி சேனல் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவரிடம், ‘கோவையில் நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள் என எதிர்பார்ப்பு இருந்தது. நீங்களும் நம்பிக்கையோடு இருந்தீர்களே. என்ன நடந்தது’ என நெறியாளர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ‘‘கோவையில் நான் போட்டியிட்டு 4.50 லட்சம் ஓட்டுக்கள் பெற்றேன். கடந்த 2009ம் ஆண்டு தேர்தலின் போது பாஜ 44 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கி இருந்தது. அதன்பிறகு மோடி பிரதமராக பதவியேற்ற பின் களசூழல் வேறுமாதிரியாக மாறி இருந்தது. பாஜ சார்பில் போட்டியிட்ட நான் 34 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றேன். இதில் என்னவென்றால் அதிமுக பெற்ற ஓட்டுக்கள் திமுக வெற்றி பெற காரணமாகி விட்டது.
கேரள மாநிலத்தில் நடந்த தேர்தலில், 3ம் இடம் பிடித்த கட்சி வேட்பாளர்களின் ஓட்டுக்கள் தான் யார் முதல் இடம் பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலையில் இருந்தது. அதுபோன்ற சூழல் தான் கோவையிலும் நிலவியது. முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 23 முதல் 24 சதவீத ஓட்டுக்கள் பரவலாக பெற்றிருந்தது. ஆனால், கோவையில் 5, 6 எம்எல்ஏக்கள் வைத்து உள்ள அதிமுக கட்சி, கடந்த தேர்தலில் 16 சதவீதமாக வாக்கு வங்கி சரிந்தது. இதனால், பாஜவால் வெற்றி பெற முடியாமல் போனது. இந்த நிலையால் தான் என்னால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டதாக நினைக்கிறேன்’ என்றார்.
அதிமுகவால் பதவி பறிபோனதா?
அதிமுகவால் உங்கள் பதவி பறிபோனதா என நெறியாளர் கேள்வி கேட்டார். அதற்கு அண்ணாமலை, ‘அது கட்சியின் முடிவு. அதை விட்டு விடலாம். அரசியலில் எதிரியே கிடையாது. ஏன் என்றால் சில நேரங்களில் அவர்களுடன் கூட்டணி வைக்கிறோம். அதுதான் இந்திய அரசியல். நிரந்திர நண்பணும் கிடையாது. நிரந்திர எதிரியும் கிடையாது. தொலைநோக்கு பார்வையில் அரசியல் பார்த்தால் எனக்கு வித்தியாசமாக தெரிகிறது. பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. அதிமுகவுடன் எங்களுக்கு முரண்பாடு இருக்கிறது.
சித்தாந்தம் ரீதியாக கூட இருவருக்கும் வித்தியாசம் உண்டு. 2026 தேர்தலில் கூட்டணியில் உள்ளோம். இதனால் ஒருவரை ஒருவர் குறை சொல்ல மாட்டோம். பல விவகாரங்களில் எனக்கும், அதிமுகவுக்கும் முரண்பாடு உள்ளது. நேரம் சரியில்லை என்றால் வாயை மூடி கொண்டு இரு என்று அரசியல் எனக்கு கற்று கொடுத்தது. முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டதால் நான் வாயை மூடிக்க பழகி விட்டேன்’ என்றார்.
