ஈரோடு, ஜன. 11: நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்குவதை கைவிட வலியுறுத்தி ஈரோட்டில் நடந்த சாலை பணியாளர்கள் சங்கத்தின் கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு தாலுகா அலுவலக பின்புறத்தில் உள்ள கூடலிங்க திடலில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தின் கோட்ட மாநாடு நேற்று நடந்தது. கோட்ட இணை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாபு, மாநில பொருளாளர் தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்விதிறன் பெறா ஊழியருக்கான ஊதியத்தை தற்போதைய ஊதிய மாற்ற பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்க வழங்குவதை கைவிட்டு அரசே ஏற்று சாலை பணியாளர்களை கொண்டு பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.