திருப்பரங்குன்றம், ஜன.11: மூலக்கரையில் நடந்த தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டத்தில் 11 மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் மூலக்கரையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மத்திய மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில துணை செயலாளர் தமிழ்மறை வரவேற்றார்.
தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாச.பிரபு, மாநகர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், மாநகர் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசிர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி எம்எல்ஏ, மணிமாறன், கோ.தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் கண்ணன் நன்றி கூறினார்.