பந்தலூர், ஜன.7: சேரம்பாடி வனச்சரகம் சேரங்கோடு ஊராட்சி பகுதியில் யானைகளிடமிருந்து மனித உயிர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேரம்பாடி சுங்கம் பகுதியில் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கணபதி தலைமை வகித்தார், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி முன்னிலை வகித்தார். அரசு மற்றும் வனத்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி எலியாஸ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜா, வி.சி.க. நிர்வாகி ராஜேந்திரபிரபு, முன்னாள் யூனியன் கவுன்சிலர் மகாவிஷ்னு, சேரங்கோடு ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.