ஈரோடு, ஜன. 7: ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் 30ம் தேதிதான் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு, கோயிலில் நடப்பட்டிருந்த கம்பம் பிடுங்கப்பட்டு, கோயிலுக்கு சொந்தமான 100 ஆண்டு பழமையான தெப்பக்குளத்தில் விடப்பட்டது. இந்த தெப்பக்குளத்தில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விழுந்து தற்கொலை செய்வது அதிகரித்ததால், இதனை தடுக்கும் வகையிலும், தெப்பக்குளம் மாசடையாமல் இருக்கவும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தெப்பக்குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து கம்பி வேலி போடப்பட்டது. இக்கோயில் நிகழ்ச்சிக்காக மட்டும் தெப்பக்குளம் கடந்த சில ஆண்டாக திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை தெப்பக்குளத்தின் ஒருபுற சுற்றுச்சுவர் திடீரென இடிந்து நீர் குளத்திற்குள் விழுந்ததால், பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக குளத்தின் அருகில் யாரும் இல்லாததால் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. தெப்பக்குளத்தில் எஞ்சிய சுற்றுச்சுவரின் உறுதித்தன்மையை அதிகாரிகள் உறுதி செய்து, தெப்பக்குளத்தின் அருகில் யாரும் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.