×

ஆவடியில் நில புரோக்கர் வீட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை

ஆவடி:  நில புரோக்கர் வீட்டை உடைத்து 30 சவரன் நகைகளை மர்ம் நமபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.     ஆவடி, பருத்திப்பட்டு, பிஷப் லைனில் வசிப்பவர் தேவராஜ் (50).  நில புரோக்கர். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகள், மகன் உள்ளனர்.  கடந்த 18ம் தேதி தேவராஜ் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான ஓசூருக்கு சென்றார். இதன் பிறகு, இவரது வீட்டை பக்கத்து தெருவில் வசிக்கும் உறவினர் சாந்தி என்பவர் கண்காணித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சாந்தி, தேவராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த சாந்தி, உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு  துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

 சாந்தி, உடனடியாக தேவராஜை தொடர்பு கொண்டு தகவல் கூறினார். மேலும், இது குறித்து சாந்தி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார். இதன் பிறகு, சம்பவ இடத்திற்கு ஆவடி போலீசார் விரைந்து வந்தனர். விசாரணையில், தேவராஜ் வீட்டில் 30 சவரன் நகைகளை துணியில் சுற்றி மறைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தேவராஜ் குடும்பத்தினர் வந்த பிறகு தான் மேலும் என்ன பொருட்கள் திருடு போயிருக்கிறது என்ற  விபரம் தெரியவரும் என்றனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.   

Tags : Land broker ,house ,Avadi ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்