திருவில்லிபுத்தூர், ஜன. 7: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நான்கு மாதங்களுக்குப் பிறகு நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ தலங்களில் முதன்மையானது. எனவே,
தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் ஆண்டாளை தரிசனம் செய்து விட்டு தங்கள் காணிக்கைகளை கோயிலில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் போடும் காணிக்கை நான்கு மாதங்களுக்கு
ஒரு முறை கோயில் நிர்வாகத்தின் சார்பில் திறந்து எண்ணப்படும்.
நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதற்காக ஆண்டாள் கோயில் மற்றும் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதி, பெரிய ஆழ்வார் சன்னதி, நம்மாழ்வார் சன்னதி ஆகிய அனைத்து இடங்களில்
வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் அனைத்தும் ஆண்டாள் கோயில் மைய மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதன் பின்னர் 17 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இப்பணியில் கோயில் ஊழியர்களும், தேர்வுசெய்யப்பட்ட பக்தர்களும்
பங்கேற்றனர். ஆண்டாள் கோயில் உண்டியல் எண்ணிக்கை 19 லட்சத்து 33 ஆயிரத்து 41 ரூபாய் இருந்தது. மேலும் தங்கம் 133 கிராம், வெள்ளி 231 கிராம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணிகளுக்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன்,
உதவி ஆணையர் கணேசன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், ஆய்வாளர் பாண்டியன் சிறப்பாக செய்திருந்தனர்.