×

வயலில் தேங்கிய மழைநீரால் அழுகி வரும் மிளகாய் செடிகள் வேதனையில் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.7:  ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மிளகாய் செடிகள் சேதமடைந்துள்ளது  இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகமான மிளகாய் சாகுபடி செய்யும் பகுதிகளில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியும் அடங்கும். இங்கு விளைச்சல் ஆகக்கூடிய மிளகாய் வத்தல் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றது. இங்கு விளையும் மிளகாய் மிகவும் தரமாக இருக்கும் என்பதால் மதுரை, விருதுநகர், சாத்தூர்,பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி,கரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். இதற்காக வாரம் ஒருமுறை சனிக்கிழமை தோறும் சந்தை நடைபெறும்.

இவ்வளவு சிறப்பும் இப்பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்து விளைவிக்கும் மிளகாய்களால் தான். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் இங்கு பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்படைந்துள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக கூடுதலாக விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக இரட்டையூரணி, புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, சவேரியார்பட்டினம், செங்குடி, பூலாங்குடி, வாணியக்குடி, சீனாங்குடி, வண்டல், வரவணி, சேத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு ஆண்டில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மிளகாய் செடிகள் நன்றாக வளர்ச்சியடைந்த நிலையில் தண்ணீரில் மூழ்கிய மிளகாய் செடிகள் வயல்களில் அழுகியுள்ளன. பல ஆயிரங்களை கடன் வாங்கி செலவு செய்து மிளகாய் சாகுபடி செய்துள்ள நிலையில், மழையால் மிளகாய் செடிகள் பாதிப்படைந்து உள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

Tags : chilli plants ,field ,
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது