×

பணம் இரட்டிப்பு மோசடி கும்பலில் மேலும் 3பேருக்கு வலை

நாமக்கல், ஜன.7: நாமக்கல்லில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல்-சேந்தமங்கலம் ரோட்டில், நேற்று முன்தினம் இரவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், பணம் இரட்டிப்பு மோசடி கும்பலை சேர்ந்த பாஸ்கரன், மணிமாறன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு: நாமக்கல் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ்(43). இவர் வைத்துள்ள டாஸ்மாக் பாருக்கு சேந்தமங்கலம் பாஸ்கரன்(26), மணிமாறன்(45) ஆகிய இருவரும் அடிக்கடி மது குடிக்க வந்துள்ளனர். அப்போது, தங்களுக்கு தெரிந்தவர்கள், கணக்கில் வராத கருப்பு பணம் நிறைய வைத்துள்ளதாவும், அதை வெள்ளையாக மாற்றி, இரட்டிப்பாக பணம் தருவதாகவும் கூறியுள்ளனர். இதனால், வெங்கடேசுக்கு பணத்தாசை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சேந்தமங்கலம் ரோட்டில் ரயில்வே பாலம் அருகே, ஒரு காரில் பாஸ்கரன், மணிமாறன், விக்ரம் மற்றும் சிலர் இருந்தனர். அங்கு வந்த வெங்கடேஷ் ₹5 ஆயிரத்தை விக்ரமிடம் கொடுத்தார். அதற்கு பதிலாக காரில் இருந்தவர்கள் 100 ரூபாய் கட்டுகளை கொடுத்துள்ளனர்.

அப்போது அங்கு போலீசார் வரவே, விக்ரம் மட்டும் தப்பி ஓடி விட்டார். மற்ற இருவரையும் போலீசார் கைது செய்து, போலீஸ் ஸ்டேசன் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வெங்கடேஷிடம் கொடுக்கப்பட்ட 100 ரூபாய் கட்டை பிரித்து பார்த்தபோது, அதில் மேல் பகுதியில் மூன்று 100 ரூபாய் நோட்டுகளும், அடியில் இரண்டு 100 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மற்றவை அனைத்தும் வெற்று வெள்ளை தாள்கள். இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட பாஸ்கரன், மணிமாறன் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கண்ணகி, விக்ரம், முருகன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்