கிருஷ்ணகிரி, ஜன.7: கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூர்ணாஹூதி, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு கால பைரவர் உற்சவம், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, சாம்பல் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் கிருஷ்ணகிரி மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் குலதெய்வமாக வழிபடும் கிராமங்களை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.