×

மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா: திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேச்சு

செங்கல்பட்டு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா, அனைத்து குடும்பங்களுக்கும் பெற்றுத்தரப்படும் என திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் மக்கள் கிராம சபை கூட்டத்தில், பேசினார். செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சி வேம்பாக்கம் கிராமத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வி.ஜி.திருமலை, ஆப்பூர் சந்தானம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஈஸ்வரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.கே.டி.கார்திக், திமுக ஊராட்சி செயலாளர்கள் கே.பி.ராஜன், அருள்தேவி, ஜெயக்குமார், கருணாகரன், சிலம்புசெல்வன், சீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக எம்பி செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற பொதுமக்கள், ஆலப்பாக்கம் ஊராட்சியில் பாதாள சாக்கடை இல்லை. பாலாறு தண்ணீர் சரிவர வருவதில்லை. குப்பைகள் சரிவர அள்ளுவதில்லை. சாலை வசதி இல்லை என்பது உள்பட பல்வேறு குறைகளை கூறினர். பின்னர், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், எனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சிமென்ட் சாலை, ஆர்ஓ குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளேன். தமிழகத்தில் திமுக ஆட்சி விரைவில் அமையும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா, அனைத்து குடும்பங்களுக்கும் பெற்றுத்தரப்படும். முதியோர் உதவித்தொகை, மகளிர் சுயதொழில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். அனைவரும் அதிமுகவை நிராகரித்து திமுகாவை ஆதரிக்கவேண்டும் என்றார்.

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் கிராம சபை கூட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்டரம்பாக்கம் கிராமத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குண்ணம் ராமமூர்த்தி வரவேற்றார். அவை தலைவர் மோகனன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், ஜார்ஜ், செந்தில்தேவராஜன், ஒன்றிய துணை செயலாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை கழக பேச்சாளர் தக்கோலம் தேவபாலன் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அதிமுக அரசின் அவலங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் மாவட்ட துணை அமைப்பாளர் சந்தவேலூர் சத்யா, ஒன்றிய அமைப்பாளர்கள் சோகண்டி பாலா, மண்ணூர் சரவணன், எச்சூர் போஸ்கோ, கட்சி நிர்வாகிகள் கணேஷ்பாபு, சர்தார் பாஷா, பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பலகையில் ஏராளமான மக்கள் கையெழுத்திட்டனர்.

Tags : Varalakshmi Madhusudhanan ,families ,Chief Minister ,MK Stalin ,DMK ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...