×

அம்மா உணவகத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கலெக்டர் அலுவலகம் அருகில் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் திருவள்ளூரில் செயல்பட்டு வந்த தலைமை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டதால் பழைய கட்டிடங்களை இடித்து தற்போது அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அம்மா உணவகம் அமைந்துள்ள பகுதியில் தற்போது இந்த கட்டிட பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியே சேறும் சகதியுமாக மாறியதுடன் வழியின்றி காணப்படுகிறது.

இதனால், பகல் நேரங்களில் மண் தூசி பறந்து அம்மா உணவகத்திற்கு சாப்பிட வருபவர்கள் மற்றும் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மீது படிந்து பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும், அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் வீணாகி போவதால் இடத்தை மாற்றி தரக்கோரி ஊழியர்கள் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நேற்று அம்மா உணவக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உடனடியாக அம்மா உணவகத்தை இடம் மாற்றி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் விசாரித்தபோது இன்னும் 3 நாட்களில் வேறு இடத்தில் அம்மா உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : Staff sit-ins protest ,mom ,restaurant ,
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...