×

தென்னூர் குத்பிஷா நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் வழிந்தோடும் கழிவுநீர்

திருச்சி, டிச.6: திருச்சி தென்னூர் குத்பிஷா நகரில் கடந்த சில மாதங்களாக குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அவ்வப்போது மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை. சாலையின் இருபுறமும் வீடுகள் இருக்கும் நிலையில் சாலையில் நடுவில் ஆறு போல் ஓடும் கழிவுநீரால் தூர்நாற்றம் தாங்க முடியாமல் வீட்டு கதவை திறந்து வைக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்றும் சாக்கடை அடைப்பால் சாலையில் ஓடும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராடுவதற்கு ஆயத்தமாயினர். தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் அடைப்பை தற்காலிகமாக சரிசெய்து கொடுத்தனர். மேலும் அடைப்பு ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்திட பதிக்கப்பட்ட சிறிய குழாய்களை அப்புறப்படுத்தி, பெரிய குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாக தெரிகிறது.
குத்பிஷா நகரில் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை எனில் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொதுமக்களின் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வழிந்தோடும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : apartments ,Tennur Qutbisha ,town ,
× RELATED உரிய ஆவணமில்லாத ரூ.68 ஆயிரம் பறிமுதல்