சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நவம்பர் 9ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து 43 பேர் புறப்பட்டு மெக்காவில் உம்ரா தொழுகை நடத்திவிட்டு மதீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் அல் மீனா மற்றும் நம்பள்ளியில் உள்ள அல் மெக்கா டிராவல்ஸ் வழியாகப் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அதிகாலை 1.30 மணியளவில் முஃப்ரிஹாத் அருகே டீசல் லாரியும், மெக்கா விலிருந்து மதினாவுக்கு சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து நடந்த நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் பேருந்தில் இருந்து வெளியேற முடியவில்லை. அவர்களில் பலர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மல்லேபள்ளியின் பசார்காட் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இறந்தவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் இன்னும் சரிபார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது, மேலும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி டெல்லியில் உள்ள அதிகாரிகள், தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்குமாறு கேட்டுக் கொண்டார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவுவதற்காக அரசாங்கம் கட்டுப்பாட்டு அறை எண்களையும் வெளியிட்டுள்ளது – +91 7997959754 மற்றும் +91 9912919545. ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் 24×7 கட்டுப்பாட்டு அறையையும் அமைத்து உதவிக்காக கட்டணமில்லா உதவி எண்ணை (8002440003) வெளியிட்டுள்ளது.
