×

நீடாமங்கலம் ரேஷன் கடைகளில் பேனர், கொடியுடன் அதிமுகவினர் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

நீடாமங்கலம், ஜன.6: நீடாமங்கலம் திமுக ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதியில் உள்ள நீடாமங்கலம் பேரூராட்சி 15 வார்டுகள் கொண்டது. இங்கு வாழும் மக்கள் பயன்பெற இரண்டு ரேஷன் கடைகள் சர்வமாணிய அக்ரஹாரத்தில் செயல்பட்டு வருகிறது. ஒரு கடையில் 558 குடும்ப அட்டைகள், மற்றொரு கடையில் 508 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் பொருட்கள் பெறுவதற்கு டோக்கன் இரண்டு நாட்களாக வீடு வீடாகச் சென்று அதிமுகவினர் வழங்கினர். அது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் மிகப்பெரிய பிளக்ஸ் பேனர்கள் அதிமுக கொடி மற்றும் சின்னத்துடன் கட்டி நேற்று காலை ரேஷன் கடை வாசலில் அதிமுக நிர்வாகிகள் மேஜை, நாற்காலி போட்டு அமர்ந்து அரசு வழங்கிய புடவை, வேட்டிகளை அரசு பதிவேட்டில் கையொப்பம் வாங்கி இவர்கள் கொடுப்பதுபோல் கொடுத்து வருகின்றனர். இந்த செயல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : ration shops ,Needamangalam ,
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு