திருவாரூர். ஜன.6: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தினை கல்வி நிறுவனங்கள் வரும் 15ம் தேதிக்குள் அளிக்குமாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளின் 2019-2020ம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி விண்ணப்பதாரர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளாக இருத்தல் வேண்டும். பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இந்த மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்காக 2020-21ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தை அணுகி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தாங்கள் பயின்று வரும் கல்வி நிறுவனங்களில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரி மற்றும் tngovtiitscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.