×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் வரும் 15ம் தேதி திருவூடல் விழா

திருவண்ணாமலை, ஜன.6: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 15ம் தேதி திருவூடல் திருவிழா நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் உற்சவ விழாக்கள், கொடியேற்றத்துடன் தொடங்குவது மரபு. அதன்படி, ஆண்டுக்கு 4 முறை அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம், ஆனி பிரமோற்சவம், மார்கழி மாதத்தில் உத்தராயண புண்ணியகாலம் ஆகியவற்றின் தொடக்கமாக, அண்ணாமலையார் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க ெகாடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். அதேபோல், ஆடிப்பூர பிரமோற்சவத்தின் தொடக்கமாக, அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

இந்நிலையில், மார்கழி மாதத்தில் நடைபெறும் உத்தராயண புண்ணியகால பிரமோற்சவ கொடியேற்றம் நேற்று காலை 7.30 மணியளவில் அண்ணாமலையார் கோயிலில் விமரிசையாக நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, சுவாமி சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றினர். அப்போது, அலங்கார ரூபத்தில் விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகியோர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து, மாட வீதியில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். உத்தராயண புண்ணியகால பிரமோற்சவத்தை முன்னிட்டு, மார்கழி மாதம் இறுதி வரை தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில், சுவாமி மாட வீதியுலா நடைபெறும். மேலும், வரும் 14ம் தேதி தாமரை குளத்தில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி நடைபெறும். அதைத்தொடர்ந்து, வரும் 15ம் தேதி பிரசித்தி பெற்ற திருவூடல் திருவிழாவும், 16ம் தேதி மறுவூடல் விழாவும் நடைபெற உள்ளது.

Tags : festival ,Thiruvannamalai Annamalaiyar Temple Uttarayana ,Thiruvodal ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!