×

மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு வருமானமின்றி தொழிலாளர்கள் தவிப்பு

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.6:  பருவமழை தொடர்ந்து நீடித்து வருவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வந்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றன்னர். ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக கிழக்கு கடற்கரை பகுதிகளான திருப்பாலைக்குடி, சம்பை,தேவிபட்டினம், சித்தார்கோட்டை, பனைக்குளம், மோர்ப்பண்ணை உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பாலைக்குடி, சம்பை, கோப்பேரிமடம், நதிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழைநீர் தேங்கி, உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளன. உப்பு உற்பத்திக்கு ஏற்ற சீதோஷண நிலை இல்லாததாலும், உப்பளங்களில் உள்ள பாத்திகளில் மழைநீர் தேங்கியதாலும் உப்பு உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் அங்கு பணி செய்யும் உப்பள தொழிலாளர்கள் வேலையின்றி பாதிப்படைந்துள்ளனர்.

தொழிலாளர்கள் கூறுகையில், ஏற்கனவே கொரோனா காலத்திலும் நாங்கள் கடுமையாக வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டோம். தற்போது பருவமழை நீடித்து வருவதால் உற்பத்தி அடியோடி பாதிப்படைந்துள்ளது. இதனால் எங்களுக்கு வேலை இல்லை. இந்த வருவமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தோம். தற்போது குடும்ப செலவிற்கே பணம் இல்லாமல் தவித்து வருகின்றோம். மீனவர்களுக்கு தடை காலத்தில் நிவாரண நிதி கொடுப்பது போல், எங்களுக்கும் மழை காலங்களில் அரசு நிதி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...