குன்னூர், ஜன. 6: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்ரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரண்டு மாடிக்கு மேல் கட்டிடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு மற்றும் அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆற்றினை ஆக்கிரமித்து நான்கு முதல் ஐந்து மாடிகள் வரை கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தேயிலை தோட்டங்களை அழித்து கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்.
இது குறித்து ஆர்வலர்கள் கூறுகையில், குறிப்பிட்ட அளவிற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது என விதிமுறைகள் இருந்தும், அரசியல் பலத்தை வைத்துக் கொண்டு 5 மாடிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டிவருகின்றனர். முக்கிய ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டுவதால், அதிக மழைப்பொழிவு காலங்களில் மண்சரிவு மற்றும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் மலையை குடைந்து சாலை அமைப்பதற்கு தடை உள்ளது. குன்னூர் அருகே உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட காட்டேரி அணை கிராமம் அருகே தேயிலை தோட்டங்களை அழித்து, பொக்லைன் இயந்திரம் மூலம் மலையை குடைந்து சாலை அமைத்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.